


திரைப்பட கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர், சமூக பொறுப்புமிக்க மனிதராக அனைத்து சமூக செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது ரசிகர்களை பொறுப்புமிக்க மனிதர்களாக மேம்படுத்தும் பெரும் கடமையை ஏற்று நடத்தினார். ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றினார். சமூகப் பொறுப்பு, தன்னலமற்ற பொதுச் சேவைகளை மட்டுமே கடமையாகக் கொண்டு செயற்பட்ட தளபதியின் நற்பணி மன்றத் தோழர்களை, இயக்கமாக ஒருங்கிணைப்பதன் காலத்தின் தேவையின் பொருட்டு 'விஜய் மக்கள் இயக்கம்' தொடங்கப்பட்டது. ஈழத்தமிழ் உறவுகளுக்காக உண்ணாவிரதப் போராட்டம், தமிழக மீனவர்களுக்காகக் குரல், ஜல்லிக்கட்டு தமிழர் உரிமைக்காகத் துணை நின்றது போன்ற சமூக களத்திலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கான தேவைகள் எனத் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட நற்பணிகளையும் மக்கள் இயக்கமாக வழிநடத்தினார். கழகத் தலைவரின் நேரடி அரசியல் ஈடுபாடு என்பது அவரது கடமையான பொறுப்புகளையும், காலத்தின் மற்ற தேவையையும் நிறைவு செய்வதாக நிகழ்ந்துள்ளது. மக்களின் தேவையையும் நம்பிக்கையும் மட்டுமே ஏற்று உருவான தலைமை, தமிழகத்தின் வருங்கால மக்களாட்சிக்கான பொறுப்பைச் சாத்தியப்படுத்தும்.

திரு. N. ஆனந்த், பொதுச் செயலாளராக, தனது சிறந்த நிர்வாக திறமையாலும், கழகத் தோழர்களை ஒருங்கிணைக்கும் திறமையாலும் அமைப்பின் வலுவான தூணாகத் திகழ்கிறார். அவர் தனது பொதுப் பணியை, கழகத் தலைவரின் தீவிர ரசிகராகத் தொடங்கினார். புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து, அனைத்திந்திய விஜய் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளராக முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
